இனியாவது திமுக அரசு விழித்துக் கொள்ள வேண்டும் : எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
ஸ்ரீரங்கம் பகுதிக்கு பேருந்து ஒன்று சென்றுகொண்டு இருந்தது. பேருந்தை பாஸ்கரன் என்பவர் ஓட்ட, நடத்துனராக எடமலைபட்டி புதூரைச் சேர்ந்த முருகேசன் (வயது 54) என்பவர் பணியாற்றினார். பேருந்தில் அதிக கூட்டம் இல்லாத காரணத்தால் கடைசியில் இருந்து வலது புறமுள்ள மூன்றாவது இருக்கையில் நடத்துனர் அமர்ந்திருந்தார்.
இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “திருச்சி நகரப் பேருந்து ஓடிக்கொண்டு இருக்கும்போது நடத்துனர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டு வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்ய வேண்டும் என்று, அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் திமுக அரசை வலியுறுத்தியதாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.
மேலும், “ஆனால் மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பொது மக்களிடம் அரசு பேருந்து பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன. எனவே, இனியாவது திமுக அரசு விழித்துக் கொள்ள வேண்டும்.அரசு பேருந்துகளின் ஆயுள் காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, மக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்” என எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார்.
READ ON APP