Hero Image

வங்கிக் கணக்கில் நமக்கே தெரியாமல் காணாமல் போகும் பணம்.. 295 ரூபாய் எங்க போச்சு?

உங்களுடைய வங்கிக் கணக்கில் இருந்து 295 ரூபாய் திடீரென்று எடுக்கப்பட்டதா? அதற்கான காரணம் என்ன தெரியுமா?
வங்கிக் கணக்கில் மறையும் பணம்!

வங்கிக் கணக்கில் திடீரென்று ஒரு தொகை கழிக்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான கட்டணம் மற்றும் இதர சேவை கட்டணம் என 20 ரூபாய், 50 ரூபாய் என வசூலிக்கப்பட்டாலும் பரவாயில்லை.

ஆனால் நூற்றுக்கணக்கில் பணம் காணாமல் போவதாகக் கூறுகின்றனர்.


295 ரூபாய் எங்க போச்சு?

வங்கி வாடிக்கையாளர்கள் பலரிடம் திடீரென 295 ரூபாய் வசூல் செய்யப்பட்டதாகக் கூறுகின்றனர். இந்தப் பணம் ஏன் பிடிக்கப்பட்டதே என்றே அவர்களுக்குத் தெரியவில்லை. சொல்லப்போனால் நிறையப் பேருக்கு இந்தப் பணம் பிடிக்கப்படுவதே தெரிவதில்லை. என்றாவது ஒருநாள் பணம் குறைந்துவிட்டதே என்று பார்க்கும்போதுதான் இந்த விஷயம் தெரியவருகிறது.


என்ன காரணம்?

வங்கிக் கணக்குகளில் இருந்து 295 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், இந்த பணம் மீண்டும் வருவதில்லை எனவும் சில வாடிக்கையாளர்கள் புகார் கூறுகின்றனர். உண்மையில் இந்தப் பணம் கடன் EMI தொகையை உரிய தேதியில் செலுத்தவில்லை என்பதால்தான் வசூலிக்கப்படுகிறது. கடன் EMI தொகைகளைக் கண்காணித்து வரும் அமைப்பான NACH விதிமுறைகளின் கீழ் EMI தொகையை உரிய தேதியில் செலுத்தாதவர்களிடம் இருந்து 295 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படுகிறது.


பணம் இருக்க வேண்டும்!

வங்கிகளில் வீட்டுக் கடன் அல்லது வேறு ஏதாவது கடன் வாங்கியிருந்தால் அதற்கான EMI தொகை ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட ஒரு தேதியில் உங்களுடைய வங்கிக் கணக்கில் இருந்து தானாக எடுத்துக்கொள்ளப்படும். உதாரணமாக, ஒவ்வொரு மாதமும் 5ஆம் தேதியில் EMI தொகை கழிக்கப்படும் என்றால் நீங்கள் முன்கூட்டியே அந்தப் பணத்தை கணக்கில் வைத்திருக்க வேண்டும்.


பணம் கழிக்கப்படும்!

நீங்கள் வாங்கிய கடனுக்கான EMI தொகையை உரிய தேதியில் செலுத்தாவிட்டால் அது மீண்டும் வசூலிக்கப்படும். அதற்கான அபராதத் தொகையையும் நீங்கள் செலுத்த வேண்டும். அடுத்து உங்களுடைய வங்கிக் கணக்கில் பணம் வந்தவுடன் இந்த 295 ரூபாய் தானாக கழிக்கப்பட்டுவிடும்.


​ஏன் 295 ரூபாய்?

உரிய தேதியில் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்றால் அதற்கு 250 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். இதனுடன் சேர்த்து 18 சதவீதம் ஜிஎஸ்டியாக 45 ரூபாய் கொடுக்க வேண்டும். ஆக மொத்தம் 295 ரூபாய் வங்கிக் கணக்கில் இருந்து அபராதத் தொகையாக வசூலிக்கப்படுகிறது. சில வங்கிகள் இந்த அபராதத் தொகையை மாதந்தோறும் வசூலிக்கின்றன. ஆனால் சில வங்கிகள் பல மாதங்கள் சேர்த்து ஒரே அடியாக எடுத்துக் கொள்கின்றன.

READ ON APP