Hero Image

கண்முன்னே கொலை செய்யப்பட்ட மகள்.. கத்தியால் குத்தியவனை அடித்தே கொன்ற தாய்.. தெறி சம்பவம்

பெங்களூர்: கண் முன்னே தனது மகளை கொலை செய்தவனை, அவரது தாய் அடித்தே கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள சாகம்பரி நகரைச் சேர்ந்தவர் அனுஷா. 24 வயதான அனுஷா, அங்குள்ள ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த சூழலில், இரு தினங்களுக்கு முன்பு அனுஷாவின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.
அதில் பேசிய அனுஷா, சிறிது நேரத்தில் வந்துவிடுவதாக தனது தாயாரிடம் கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார்.ஆனால், அனுஷாவின் முகத்தில் ஒருவித பதற்றம் இருப்பதை தெரிந்து கொண்ட அவரது தாயார், அனுஷாவுக்கு தெரியாமலேயே அவரை பின்தொடர்ந்து சென்றார். அப்போது அனுஷா அங்குள்ள ஒரு பூங்காவுக்கு சென்றிருக்கிறார். பின்னர் அங்கு வந்த ஒரு இளைஞர், அனுஷாவிடம் பேசியுள்ளார். இதை அனைத்தையும் அவரது தாயார் கீதா மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது சற்றும் எதிர்பார்க்காத சமயத்தில், தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து, அனுஷாவின் வயிற்றில் குத்தினார். இதை பார்த்து பதறிய அவரது தாய் கீதா, தப்பிக்க முயன்ற அந்த இளைஞரை பாய்ந்து சென்று பிடித்து கீழே தள்ளினார். பின்னர் அங்கிருந்த சிமெண்ட் பலகையை எடுத்து அந்த இளைஞரின் தலையில் சரமாரியாக கீதா அடித்தார். இதில் அந்த இளைஞர் அப்படியே மூர்ச்சையானார். இதனைத் தொடர்ந்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த தனது மகளை மீட்டு, அருகில் இருந்த மருத்துவமனைக்கு கீதா கொண்டு சென்றார்.
அனுஷாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனிடையே, கீதாவால் தாக்கப்பட்ட அந்த இளைஞரும் பூங்காவிலேயே இறந்து கிடந்தார். விசாரணையில் அவரது பெயர் சுரேஷ் என்பது தெரியவந்தது. சுரேஷும், அனுஷாவும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். அப்போது சுரேஷ் தனக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பதை மறைத்துவிட்டு, அனுஷாவிடம் பழகியுள்ளார். மேலும், திருமணம் செய்து கொள்வதாகவும் அனுஷாவிடம் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.
இந்நிலையில், சுரேஷுக்கு திருமணமானதை தெரிந்து கொண்ட அனுஷா, அவர் உடனான உறவை துண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், பேச அழைப்பது போல அழைத்து, அனுஷாவை கொலை செய்துள்ளார் என போலீஸார் தெரிவித்தனர்.

READ ON APP